
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நிஜாம்பேட்டை பச்சுபள்ளி-மியாபூர் சாலையோர முள்புதரில் புதிதாக இருந்த சூட்கேசில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, ஆடு மேய்த்தவர்கள் அந்த சூட்கேஸை கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அந்த சூட்கேஸை திறந்தபோது அதில் அழுகிய நிலையில் ஒரு இளம்பெண் சடலம் இருந்தது. விசாரணையில், இறந்தவர் நேபாளத்தை சேர்ந்த தாரா பெஹாரா (33) என்பதும், அவரை அவரது கள்ளக்காதலனான விஜய்தோபா (30) என்பவரே கொலை செய்ததும் தெரியவந்தது.
தாரா பெஹாராவிற்கு திருமணம் ஆகியிருந்தும், விஜய்தோபாவுடன் கள்ள உறவில் இருந்துள்ளார். இருவரும் ஏப்ரல் மாதம் ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் அருகே வாடகைக்கு வீடு எடுத்து, உல்லாசமாக இருந்தனர். பின்னர் இந்திரம்மா காலனியில் ஒன்றாக ‘பாஸ்ட் புட்’ கடையை நடத்தி வந்துள்ளனர்.
இதற்கிடையில் தாரா கர்ப்பம் ஆனதை அறிந்த விஜய், கருக்கலைப்பு செய்ய வற்புறுத்திய நிலையில், தாரா அதை மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபமடைந்த விஜய், துணியால் தாராவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் அவர் ஒரு பெரிய சூட்கேஸ் வாங்கி, சடலத்தை அதில் அடைத்து பச்சுபள்ளி-மியாபூர் சாலையில் உள்ள முள்புதரில் வீசிவிட்டு தப்பிச் சென்றார். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் விஜய்தோபாவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.