சென்னை அரும்பாக்கம் ஜெய்நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், தனது வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போனது. இதுகுறித்து கோயம்பேடு போலீசில் அவர் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அந்த மோட்டார் சைக்கிளை திருவண்ணாமலைச் சேர்ந்த ஆல்பர்ட் ரோசாரியோ (20) என்பவர் திருடியதை கண்டறிந்தனர்.

உடனடியாக அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து மூன்று விலை உயர்ந்த பைக்குகளை பறிமுதல் செய்தனர். ஆல்பர்ட், முன்னதாகவே மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் என்பது தெரியவந்தது.

விசாரணையில், திருவண்ணாமலைிலிருந்து அரசு பஸ்சில் சென்னைக்கு வந்து, கோயம்பேடு, வடபழனி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று, விலை உயர்ந்த பைக்குகள் நிறுத்தப்பட்ட வீடுகளை குறிவைத்து, நள்ளிரவில் திருடுவதையே வழக்கமாக வைத்திருந்தார்.

திருடிய பைக்குகளை சில நேரங்களில் குறைந்த விலைக்கு விற்றுவிட்டு, விற்க முடியாதவற்றை நண்பர்களுக்கே இலவசமாக வழங்கி வந்ததும், பெட்ரோல் டேங்க் மூடியை உடைத்து எரிபொருளையும் பயன்படுத்தி வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது அவர் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.