கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று மதியம் தனியாக இருந்த கல்லூரி மாணவி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பொள்ளாச்சியில் உள்ள வடுகபாளையம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அஸ்விதா. இவருக்கு 19 வயது ஆகும் நிலையில் ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இவரும் பிரவீன் என்ற நிதி நிறுவனத்தில் வேலை செய்யும் இளைஞரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் அஸ்விதா தன்னுடைய கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட இது பிரவீனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இது பற்றி கேட்டபோது பிரவீனுக்கும் அந்த மாணவிக்கும் இடையே தகறாறு ஏற்பட்டது. இதனால் மாணவி இன்று மதியம் தன்னுடைய வீட்டில் இருந்தபோது பிரவீன் வீட்டிற்குள் நுழைந்து மாணவியை கத்தியால் குத்தினார். அந்த மாணவியின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் பிரவீன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் மாணவியை மீட்டு அருகில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது பிரவீன் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். மேலும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.