இலங்கைத் தமிழர் சுபாஸ்கரன் என்பவர் சட்டவிரோத தடுப்பு காவலில் தமிழக கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அவருக்கு நீதிமன்றம் 10 வருடங்கள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரது தண்டனையை ஏழு வருடங்களாக குறைத்தது.

அதோடு தண்டனை காலம் முடிவடைந்ததும் அவர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக அவர் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி திபங்கர் தத்தா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இவர் ஒரு இலங்கை அகதி எனவும் அவருடைய நாட்டில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்றும் கூறினார்.

அதன் பிறகு அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் இந்தியாவில் வசிக்கும் நிலையில் இவருக்கும் இங்கேயே இருக்க அனுமதி வேண்டும் என்று வாதாடினார். அதற்கு நீதிபதிகள் இந்தியா என்பது உலக அளவில் இருந்து அகதிகள் வந்து குடியேறும் சத்திரம் ஒன்றும் கிடையாது.

ஏற்கனவே நாட்டில் 140 கோடி மக்கள் இருக்கும் நிலையில் எல்லா இடங்களிலும் இருந்து வந்து இங்கு குடியேற சத்திரம் இல்லை. அவ்வாறு செய்யவும் முடியாது. எனவே நாங்கள் உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்ற தீர்ப்பு வழங்கினர்.

அப்போது மனுதாரர் தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் அவர் இலங்கை விடுதலைப்புலி உறுப்பினராக போராடியதால் இலங்கைக்கு சென்றால் கைது செய்யப்பட்டு சித்திரவதை அனுபவிக்க நேரிடும் என்பதால் இந்த தீர்ப்பை மீண்டும் ஒருமுறை பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார். அதற்கு நீதிபதிகள் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தால் அவர் வேறு நாடுகளை அணுகலாம் என்று கூறிவிட்டனர். மேலும் மனுதாரரின் கோரிக்கையை நிராகரிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.