நாமக்கல் மாவட்டம் காவேட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ஸ்ரீதர்(54) என்பவர் இட்லி கடை நடத்தி வந்தார். கடந்த திங்கள்கிழமை இரவு ஸ்ரீதர் நாமக்கல் டி.எஸ்.பி. அலுவலகம் எதிரே உள்ள பாஸ்ஃபுட் கடையில் சாப்பிட சென்றுள்ளார். அப்போது அங்கு தகராறு ஏற்பட்டு ஸ்ரீதர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஸ்ரீதரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பாஸ்ஃபுட் கடை உரிமையாளரான ஜோதிமலர், அவரது மகள் நிஷா மற்றும் அவரது கணவரும், தமிழ் தேசம் கட்சியின் நிர்வாகியுமான மௌலீஸ்வரன், பிலிக்ஸ், கோபிநாத் மற்றும் அரவிந்த் ஆகியோரை கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.