திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரு தோப்பு வீட்டில் தம்பதியினர் தங்களது மகனுடன் வசித்து வந்தனர். இவர்கள் கடந்த ஆண்டு அவர்களது தோட்டத்து வீட்டில் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று ஈரோடு மாவட்டம் சிவகிரியில் சில தினங்களுக்கு முன்பு வயதான தம்பதியினர் அவர்களது தோட்டத்து வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் நகை, பணம் போன்றவை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள தோட்டத்து வீடுகள் மற்றும் தனியாக உள்ள வீடுகளில் வசிப்பவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு தமிழக டி.ஜி.பி உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கிராமங்களில் உள்ள வீடுகளில் போலீசார் நேரில் சென்று சோதனை நடத்தினர். இதனையடுத்து தோட்டத்து வீடுகளில் வசிப்பவர்களின் விபரம் மற்றும் அவர்களின் வீடுகளில் சிசிடிவி கேமாரக்கள் பொருத்தப்பட்டது.

பின்னர் அவர்களின் செல்போனில் எஸ்.ஓ.எஸ். செயலி பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும், வீடுகளில் நாய் வளர்ப்பது குறித்தும் போலீசார் வலியுறுத்தினர். மேலும் ஒவ்வொருத்தரின் வீடுகளிலும் அலாரம் பொருத்தப்பட்டு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

சந்தேகப்படும்படியாக யாரேனும் சுற்றி திரிந்தால் காவல் நிலைய எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு போலீசார் வலியுறுத்தினர். கிணத்துக்கடவு சுற்றுவட்டாரம் மட்டுமல்லாமல் அன்னூர், கோவில் பாளையம், கருமத்தம்பட்டி மற்றும் சூலூர் போன்ற பகுதிகளில் உள்ள கிராமங்களிலும் போலீசார் நேரில் சென்று அறிவுரை வழங்கினர்.