நைனிடால் மாவட்டத்தில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, நகரம் முழுவதும் பதற்றம் நிலவியது. பல இடங்களில் வன்முறைகள் வெடித்தன. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து கடைகள், வணிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள் அந்த மாவட்டத்தையே அதிரவைத்தன. இந்நிலையில், ஒரு இளம் பெண் கலவரக்காரர்களின் நடத்தை மீது கேள்வி எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

“குற்றம் செய்தவர் ஒருவரே என்றால், ஒரு முழு சமூகத்தையே எப்படி குற்றவாளியாகக் கருதலாம்?” என்ற கேள்வியுடன் அந்த இளம்பெண் எதிர்ப்பாளர்களை நேரடியாக சந்தித்தார். அதன் பின்னர், “சமீபத்தில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரால் நடந்த வன்கொடுமை சம்பவத்தில் இதே மாதிரியான போராட்டம் ஏன் இல்லை?” என்ற கேள்வியால் கூட்டத்தில் இருந்தவர்கள் மௌனமடைந்தனர்.

 

இந்த காணொளி வைரலாகி சமூக ஊடகங்களில் பெருமளவிலான பாராட்டுகளை பெற்றுள்ளது. பலரும், “நீதிக்காக இந்த அளவுக்கு நியாயமான குரல் தேவை” என்று கூறி அந்த பெண்ணை பாராட்டியுள்ளனர். இதனிடையே, பதற்றம் நிலவும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.