ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததோடு பலரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு லஸ்கர் இ தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிடென்சி பிராண்டு என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, காஷ்மீரில் நடந்த கொடூரம் பெரும் அதிர்ச்சியாக இருக்கும் நிலையில் உளவுத்துறை செயல் இழந்துவிட்டது என்பது தெரிகிறது. சம்பவம் உளவுத்துறை தோல்வி அடைந்து விட்டது என்பதை தான் உணர்த்துகிறது.

அங்கு பயங்கரவாதமே கிடையாது. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியோடு செல்லலாம் என்ற மத்திய அரசின் பேச்சை நம்பி சென்றவர்கள் இன்று படுகொலையாகியுள்ளனர். எனவே இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை மந்திரி அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று கூறினார். மேலும் உயிரிழந்தவர்களின் சடலங்கள் சொந்த ஊர்களுக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.