மும்பையை அண்டிய விரார் பகுதியில் மார்ச் 29 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 10:30 மணியளவில் நடந்த ஒரு சம்பவத்தில், டெலிவரி பையன் ஒருவர் மரம் விழுந்தும் அதிசயமாக உயிர் தப்பினார். அகாஷி சல்பேத் பகுதியில் உள்ள மகாராஷ்டிரா வங்கி அருகே, அவர் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஒரு பெரிய மரம் திடீரென அவரது வாகனத்தின் மீது விழுந்தது.

 

இந்த கொடூர சம்பவம் அருகிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. மரம் நேராக ஸ்கூட்டரை அடித்தபோதும், அவர் நொடிப்பொழுதில் உயிர் தப்பியது பார்ப்போரையே அதிர்ச்சியடைய வைத்தது. விபத்தில் அவர் பெரிதாக காயமின்றி தப்பியிருப்பது அதிர்ஷ்டம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.