
மத்திய பிரதேசத்தில் தொழில்நுட்பத் துறை ஊழியரான மாதவ் டிகேட்டி(38) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ஸ்வரூபா. சம்பவம் நடைபெற்ற அன்று மாதவ் தனது மனைவியின் மீது சந்தேகப்பட்டு தகராறு செய்துள்ளார். மேலும் கோபத்தில் தனது 3 1/2 வயது மகன் ஹம்மத்துடன் வெளியே சென்றார். மாதவ் நீண்ட நேரம் பாரில் கழித்த பிறகு ஒரு காட்டுப் பகுதிக்குள் மகனை தூக்கி சென்றார். அங்கேயே மாதவ் தனது மகனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இந்த நிலையில் மகனை தூக்கி சென்ற கணவர் வீட்டிற்கு வராததால் ஸ்வரூபா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அவரது மொபைல் சிக்னலை வைத்து மாதவ் ஒரு லாட்ஜில் இருந்ததை கண்டுபிடித்தனர். அவர் மதுபோதையில் இருந்தார். அவர் சுய நினைவுக்கு திரும்பியதும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காட்டு பகுதியில் வைத்து தனது மகனின் கழுத்தை அறுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனால் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாதவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.