ஆந்திர பிரதேசத்தில் படகு தொழிலாளியாக இருப்பவர் ஜனபதி வெங்கடேஷ்வரலு. இவருக்கு ரூ. 22.86 லட்சம் ஜிஎஸ்டி செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தன்னுடைய நண்பர்கள் மூலமாக ஜிஎஸ்டி வரி தொடர்பான நோட்டீஸ் தகவலை வெங்கடேஸ்வரலு தெரிந்து கொண்டார். பின்னர் அந்த நோட்டீஸ் வந்த சில மணி நேரங்களில் அவருக்கு ஒரு அதிகாரி தொடர்பு கொண்டு வரி பாக்கியை உடனே செலுத்துமாறு கூறினார். அதற்கு வெங்கடேஸ்வரலு தனக்கு எந்த ஒரு நிறுவனத்துடன் தொடர்பு இல்லை என்றார். உடனடியாக அந்த அதிகாரி காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தினார்.

அதன்படி அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் கடந்த 12ஆம் தேதி விஜயவாடா சென்று சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டபோது அப்படி எந்த ஒரு நிறுவனமும் இல்லை என்பது தெரிய வந்தது. அதோடு வெங்கடேஸ்வரலுவுக்கு பான் கார்டு கூட இல்லாதது தெரிய வந்தது. ஆனால் இவருடைய பெயரில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஒரு பான் கார்டு எடுக்கப்பட்டுள்ளது. தினக்கூலியான இவருக்கு எப்படி பான் கார்டு தயாரிக்கப்பட்டது, இவருடைய பெயரை பயன்படுத்தி யார் இந்த மோசடியை செய்தனர் போன்ற பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில் மேலும் இது தொடர்பாக போலீசாரும் அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.