
கேரளா மாநிலம் கோட்டையம் காந்திநகர் பகுதியில் அரசு நர்சிங் கல்லூரி ஒன்று உள்ளது. இந்நிலையில் இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களை 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்துள்ளனர். அதாவது முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலரை, அவர்கள் கல்லூரியில் சேர்ந்த நாளிலிருந்து அவர்களது அந்தரங்க உறுப்பில் எடை தூக்கும் கருவியை தொங்கவிடுதல், விரல்களுக்கு நடுவே ஊசியால் குத்துதல் போன்ற பல்வேறு சித்திரவதைகளை செய்துள்ளனர்.
இதன் காரணமாக ஏற்பட்ட காயங்களுக்கு முகப்பொலிவு மற்றும் தோல் சுருக்கங்களுக்கு பயன்படுத்தப்படும் லோசன்களை தடவி உள்ளனர். அதனை முகம், தலை மற்றும் வாய் உள்ளிட்ட இடங்களிலும் தேய்த்து விட்டு ராகிங் செய்துள்ளனர். மேலும் சில மாணவர்களுக்கு வலுக்கட்டாயமாக மது ஊற்றி குடிக்க வைத்துள்ளனர். அதனை வீடியோவாக எடுத்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். சீனியர் என்ற பெயரில் தொடர்ந்து சித்திரவதை செய்ததால், முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களில் சிலர் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.
அதன்பின் அந்த மாணவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட கல்லூரியில் விசாரணை நடத்தினர். அப்போது மேற்கண்ட சம்பவம் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராகிங் செய்த 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களான சாமுவேல், விவேக், ஜீவா, ரிஜில்ஜித், ராகுல்ராஜ் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த 5 மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.