மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பர்கானா மாவட்டம் ஜெய் நகர் கிராமத்தில் 10 வயதுடைய சிறுமி வசித்து வந்துள்ளார். சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சரியான நேரத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் தான் சிறுமியை காப்பாற்ற முடியவில்லை என கூறி அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சிறுமியின் பெற்றோர் சந்தேகப்படுகின்றனர். அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் காவல் நிலையத்திற்கும், அங்கிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்து எரித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.