
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் 471 நாட்களாக சிறையில் இருந்தார். இவருக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு கொடுத்தனர். இந்த வழக்கில் 30 நாட்களுக்கு மேலாக விசாரணைகள் நடந்த நிலையில் தற்போது அனைத்து விசாரணைகளும் முடிவடைந்ததால் தற்போது அவருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
அதன் பிறகு ஜாமின் வழங்குவதற்கு சுப்ரீம் கோர்ட் 4 நிபந்தனைகளை விதித்தது. அதன்படி வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். தலா 25 லட்ச ரூபாய் உத்திரவாத தொகையுடன் 2 பேர் ஜாமின் வழங்க ஒப்புதல் வழங்க வேண்டும். சாட்சிகளை கலைக்க முயற்சிக்கக் கூடாது மற்றும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குதல் போன்ற 4 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் தீர்ப்பு வெளிவந்த பிறகு அவருடைய வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அமலாக்கத்துறை கூறியதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. அடிப்படை உரிமைகளுக்கு எதிராக சிறையில் வைக்கக்கூடாது என அழுத்தம் திருத்தமாக நீதிபதிகள் கூறினார்.
அதோடு அமலாக்கத்துறை விசாரணை முடிவடைய நீண்ட காலமாகும் என்பதால் ஜாமின் வழங்கி உத்தரவிடுவதாக நீதிபதிகள் தெரிவித்ததாக கூறினார். அதோடு செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்க உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்றும் கூறினார். மேலும் இதனால் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.