ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகர் மகேஷ்பாபு. இவர் இந்திய நடிகர், சினிமா ஊடகவியலாளர் மற்றும் தயாரிப்பாளராகவும் உள்ளார். தற்போது நடிகர் மகேஷ்பாபு இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் ஹைதராபாத், தெலுங்கானாவில் ஏற்பட்ட பெரும் மழை சேதங்களுக்கு நிவாரண நிதி அளித்துள்ளார். கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழையால் தெலுங்கானா மிகவும் பாதிப்படைந்துள்ளது.

இந்த மழையால் பெரும்பாலான இடங்கள் சேதமடைந்துள்ளன மற்றும் மக்கள் பலரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பலரும் தெலுங்கானாவிற்கு உதவி வருகின்றனர். இதைத்தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபு தனது மனைவியுடன் சேர்ந்து தெலுங்கானாவின் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து நிவாரண நிதியாக ரூபாய் 50 லட்சம் காசோலையாக கொடுத்துள்ளார். இதில் ஏ.எம்.எஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 10 லட்சம் காசோலையையும் கொடுத்துள்ளார்.