
நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யவில்லை. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டிய நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று தொடங்கியது. கடந்த காலங்களில் அனைத்து பட்ஜெட்டையும் பாஜக தனி பெரும்பான்மை பலத்துடன் தாக்கல் செய்த நிலையில் முதல் முறையாக பாஜக தலைமையிலான கூட்டணி அரசு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.
மோடி தலைமையிலான அரசில் 2019 ஆம் ஆண்டு நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார். அப்போது முதல் ஒவ்வொரு வருடமும் நாடாளுமன்றத்தில் அவர் பட்ஜெட் தாக்கல் செய்து வரும் நிலையில் இன்று ஏழாவது முறையாக அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதன் மூலம் தொடர்ந்து அதிக பட்ஜெட் தாக்கல் செய்த சாதனையை நிர்மலா சீதாராமன் படைத்துள்ளார்.