ராஞ்சியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் இஷாங்க் சிங், பாக் ஜலசந்தியைக் கடந்து உலக சாதனை படைத்து ஒட்டுமொத்த இந்தியாவையுமே திரும்பிப் பார்க்க வைத்துள்ளான்.

இலங்கையின் தலைமன்னாரிலிருந்து புறப்பட்டு, இந்தியாவின் தனுஷ்கோடி வரையிலான சுமார் 29 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கரடுமுரடான கடல் பகுதியை வெறும் 9 மணி 50 நிமிடங்களில் நீந்திக் கடந்து அசத்தியுள்ளான். ராஞ்சியின் துர்வா அணையில் தினமும் 4 முதல் 5 மணி நேரம் கடுமையான பயிற்சி மேற்கொண்டு வந்த இந்த மூன்றாம் வகுப்பு மாணவன், ஏப்ரல் 30 அன்று பாக் ஜலசந்தியைக் கடந்த மிக இளம் வயது நீச்சல் வீரர் என்ற உலக சாதனையைத் தன்வசப்படுத்தினான்.

“>

உலகளாவிய சாதனைகள் மன்றத்தின் சான்றிதழைப் பெற்றுள்ள இஷாங்கின் இந்த அசாத்திய துணிச்சலை அவனது பள்ளியும், ஜார்க்கண்ட் மாநில மக்களும் கொண்டாடி வருகின்றனர். பயிற்சியாளர்கள் அமன் குமார் மற்றும் பஜ்ரங் குமார் ஆகியோரின் வழிகாட்டுதலில் உருவான இந்தச் சிறுவனின் சாதனை, அர்ப்பணிப்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

கடலின் சீற்றம் மற்றும் ஆபத்தான நீரோட்டங்களை எதிர்கொண்டு இஷாங்க் நிகழ்த்திய இந்தச் சாதனை இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளது.

“>