
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி அருகே வீரவநல்லூரில் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்த கொலை வழக்கு தற்போது முடிவடைந்துள்ளது. அதாவது கடந்த 2000 ஆம் ஆண்டு வயலில் மாடு மேய்ப்பது குறித்து ஏற்பட்ட தகராறு தொடர்ந்து 5 ஆண்டுகளில் வரிசையாக அடுத்தடுத்து 5 கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த முன்பகை காரணமாக கடந்த 2009 ஆம் ஆண்டில் வீரவநல்லூரை சேர்ந்த ஐயப்பன் என்பவரது கொலை சம்பவத்திற்கு பழி வாங்கும் விதமாக கடந்த 2011 ஆம் ஆண்டு வீரவநல்லூரை சேர்ந்த சுப்பையா தாஸ்(37), சுரேஷ் ( 37), சுரேஷ்(38), கொம்பையா(38) மற்றும் 17 நபர்கள் சேர்ந்து வீரவநல்லூரில் உள்ள பசும்பொன் தெருவை சேர்ந்த ரத்தினவேல் பாண்டியனை அரிவாளால் சரமாரி வெட்டி கொலை செய்தனர்.
இந்தக் கொலை குற்றம் தொடர்பாக இரத்தினவேல் பாண்டியன் மகன் வெள்ளத்துரை அளித்த புகாரின் பேரில் வீரவநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 21 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கடந்த 12 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் விரைவாக செயல்பட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தார்.
இதனை அடுத்து இந்த வழக்கு நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சுரேஷ்,கொம்பையா, சுரேஷ், சுப்பையாதாஸ் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும் மற்றும் தலா ரூபாய் 1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த 5 கொலை வழக்குகளில் இதுவே தண்டனை வழங்கப்பட்ட முதல் வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை திறம்பட விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்த சேரன்மகாதேவி டி.எஸ்.பி சத்யராஜ் மற்றும் வீரவநல்லூர் காவல்துறையினர் ஆகியோரை நெல்லை மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.