தேனி மாவட்டத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 7 வயது சிறுமியை தொடர்ந்து மூன்று மாதங்கள் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த தாத்தாவுக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தமபாளையம் பகுதியில் நடந்த இந்த கொடூர சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலை உருவாக்கியுள்ளது.

சிறுமியின் தாயின் புகாரின்படி, தந்தையான வைரவன் என்பவர் தனது பேத்தியை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி, அரிவாளால் சிறுமியின் காலில் வெட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.

அதன் அடிப்படையில் 14 பிப்ரவரி 2024 அன்று வைரவனை போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணை, தேனி குழந்தைகள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கணேசன் தலைமையில் நடைபெற, அனைத்து ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளை வைத்து குற்றவாளி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது.

அதனையடுத்து, POCSO சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டங்களின் கீழ், வைரவனுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை, ₹12,000 அபராதம், அபராதம் செலுத்த தவறினால் கூடுதல் சிறை தண்டனை என பல்வேறு தண்டனைகள் வழங்கப்பட்டன.

மேலும், சிறுமி எதிர்கொண்ட பாதிப்பை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் ₹9.88 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அதில் ₹1.88 லட்சம் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

மீதமுள்ள ₹8 லட்சம் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நிரந்தர வைப்பு நிதியாக சேர்க்கப்பட வேண்டும் என்றும், அதன் வட்டி தொகையை சிறுமிக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. குற்றவாளி வைரவன் தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.