உலக அரங்கில் பயங்கரவாதம் மற்றும் அமைதியின்மையின் ஊற்றுக்கண்ணாக அடிக்கடி விமர்சிக்கப்படும் பாகிஸ்தான், தற்போது ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் பதற்றத்தைத் தணித்து ஒரு ‘சமாதானத் தூதராக’ உருவெடுத்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானை ஒரே நாளில் அழித்துவிடுவேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த காலக்கெடு முடிவதற்குச் சற்று முன்பு, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோர் மேற்கொண்ட தீவிர ராஜதந்திர முயற்சிகளே இந்த இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்கு வித்திட்டுள்ளன.

ஷாபாஸ் ஷெரீப்பை தனது ‘சகோதரர்’ எனப் பாராட்டிய டிரம்ப், பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்றே தாக்குதலை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார். ஈரான், அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுடன் பாகிஸ்தான் கொண்டுள்ள நெருக்கமான உறவு, ஓமான் போன்ற நாடுகள் செய்யத் தவறிய இந்தச் சமரசத்தை வெற்றிகரமாக முடிக்க உதவியுள்ளது.

“>

இந்த அமைதி முயற்சியின் அடுத்தகட்டமாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை வரும் வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ளது. ஈரானின் 10 அம்ச கோரிக்கைகளை அமெரிக்கா பரிசீலிக்க ஒப்புக்கொண்டுள்ள நிலையில், லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வருவதாக ஷாபாஸ் ஷெரீப் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ஈரானின் இறையாண்மை மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாடு போன்ற சிக்கலான விவகாரங்களில் பாகிஸ்தான் ஏற்படுத்தியுள்ள இந்த மத்தியஸ்தம், அந்த நாட்டை ஒரு முக்கியமான சர்வதேச அதிகார மையமாக மாற்றியுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான் எடுத்துள்ள இந்த அதிரடி முயற்சி, உலக நாடுகளின் கவனத்தை இஸ்லாமாபாத் பக்கம் திருப்பியுள்ளது.