சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ரமணி என்ற பெண், தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு சிமெண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தபோது, அங்கே வேலை பார்த்த மாற்றுத்திறனாளி செந்தில்நாதனுடன் காதலில் விழுந்துள்ளார்.

இருவரும் 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு கடந்த ஏழு ஆண்டுகளாக வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். இவர்களுக்கு ஆறு வயதில் ஒரு ஆண் குழந்தை  உள்ளார். செந்தில்நாதன் தற்போது தன்னுடன் பிசினஸ் நடத்தும் ரேகா என்ற பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரியவந்ததும், ரமணிக்கு தெரியவந்தது.

இது தொடர்பாக தகராறு ஏற்பட்ட போது, “உன்ன எனக்கு பிடிக்கல… உன் முகம் பாக்கவே வெறுப்பா இருக்கு… போயிடு” என செந்தில்நாதன் ரமணியை திட்டியுள்ளார். மேலும்  தனது மகனையும் அழைத்து வீட்டை விட்டு வெளியேறினார். கடந்த 8 மாதங்களாக மகனை பார்க்காமல் ரமணி வேதனையில் உள்ளார்.

தன்னுடைய மகனை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டு, ரமணி நேரடியாக செந்தில்நாதனின் அலுவலகத்துக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த ரேகா, ரமணியை ஆபாசமாக திட்டியதுடன், தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

அலுவலகத்துக்குள் சத்தம் கேட்டவுடன், வெளியே இருந்த ரமணியின் தாயும் சகோதரரும், உள்ளே சென்று மோதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, செந்தில்நாதன் முன்னெச்சரிக்கையாக ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் சென்று, “மாற்றுத் திறனாளியான தன்னை தாக்கினர்” என புகார் அளித்துள்ளார்.  இதேபோல தனது மகனை மீட்டு தருமாறு ரமணி புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, செய்தியாளர்கள் செந்தில்நாதனின் சகோதரரை தொடர்பு கொண்டு கேட்டபோது, “இது 4-வது திருமணம். 2008ல், 2016ல் இரு திருமணங்கள் நடந்துள்ளன. ரமணியை அவர் 3-வது திருமணம் செய்துள்ளார். அவரிடம் பெண்களை ஏமாற்றும் பழக்கம் இருக்கிறது. மாற்றுத் திறனாளி என்ற பெயரில் கரிசனம் கேட்டு, உண்மையை மறைத்துக்கொள்கிறார்” எனக் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.