உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 30 பேர் ஆன்மீக சுற்றுலா சென்ற நிலையில் அவர்கள் ஆதி கைலாஷ் பகுதிக்கு சென்றனர். அந்த பகுதியில் இன்று காலை திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அதாவது உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் 30 பேரும் திரும்ப முடியாமல் தவித்தனர். இவர்களை மீட்பதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன் பிறகு கடலூர் மாவட்ட ஆட்சியரும் 30 தமிழர்களும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். அதன்படி முதற்கட்டமாக 10 தமிழர்கள் மீட்கப்பட்ட நிலையில் தற்போது அனைவரும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி 30 தமிழர்களும் உத்தரகாண்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் அனைவரையும் முதல்வர் ஸ்டாலின் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.