சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் கிழக்கு 1-வது பிளாக் பத்தாவது தெருவில் கண்ணப்பன்(70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருணா(63) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணப்பணும், அருணாவும் அமெரிக்காவில் உள்ள மகன்களின் வீட்டிற்கு சென்று தங்கிவிட்டனர். இந்நிலையில் அருணா ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் தனக்கு சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஆள் மாறாட்டம் செய்து மோசடி செய்ததாக புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை புத்தகரம் மகாத்மா காந்தி நகரில் வசிக்கும் ஹரி கோபால், மாரிமுத்து இருவரும் இணைந்து சென்னை காவாங்கரை மகாவீரர் தோட்டம் பகுதியில் வசிக்கும் லலிதா(54) என்ற பெண்ணை அருணா எனக்கூறி ஆள்மாராட்டம் செய்து அந்த நிலத்தை லோகநாதன் என்பவருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் ஹரி கோபால், மாரிமுத்து, லலிதா ஆகிய மூன்று பேரையும் நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.