தமிழக பாஜக கட்சியின் முன்னாள் தலைவரான அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் அதிமுக கூட்டணியில் பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என பிரதமருக்கு எழுதிய கடிதம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, நான் என்னுடைய வேலையை மட்டும் தான் செய்து கொண்டிருக்கிறேன். நான் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று சொல்ல மாட்டேன்.

பாஜக ஆட்சி என்று தான் சொல்வேன். தேர்தல் சமயத்தில் கூட்டணி கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று கூடி இணைந்து பேசி தொகுதி பங்கீடு தொடர்பாக முடிவு செய்து கொள்வார்கள். என்னை பொறுத்தவரையில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும். நான் மற்ற கட்சிகளை வளர்ப்பதற்காக இல்லை. கட்சி எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படுவேன். எந்த இடத்தில் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டுமோ அங்கு வாயை மூடிக்கொண்டு இருக்கிறேன். மேலும் எந்த இடத்தில் பேச வேண்டுமோ அங்கு பேசுகிறேன் என்று கூறினார்.

மேலும் அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்துள்ள நிலையில் அடுத்து வரும் தேர்தலில் அதிமுக மட்டும் தான் தனியாக ஆட்சி அமைக்கும் என அந்த கட்சியினர் கூறிவரும் நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷா கூட்டணி ஆட்சி அமையும் என கூறியுள்ளார். இதற்கிடையில் அண்ணாமலை கூட்டணி ஆட்சி கிடையாது பாஜக ஆட்சி தான் அமையும் எனக் கூறியுள்ளது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.