மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார். அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அவர் ஆதரவு வழங்க உள்ளார். துரோக அதிமுகவை வீழ்த்த 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்த அவர், பாஜக எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த அனைவரும் ஒரே குடையின் கீழ் அணியாக திரள வேண்டியுள்ளதாக கூறினார்

பிரபல நடிகரான கருணாஸ் 2016இல் முக்குலத்தோர் புலிப்படை என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து, அதிமுக கூட்டணியில் திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா, தினகரன் என ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து வந்த அவர், தற்போது மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் மூலம் வருகிற சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் அவர் இணையலாம் என கருதப்படுகிறது.