கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நேற்று மதியம் தனியாக இருந்த கல்லூரி மாணவி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பொள்ளாச்சியில் உள்ள வடுகபாளையம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அஸ்விதா. இவருக்கு 19 வயது ஆகும் நிலையில் ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இவரும் பிரவீன் என்ற நிதி நிறுவனத்தில் வேலை செய்யும் இளைஞரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் அஸ்விதா தன்னுடைய கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட இது பிரவீனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இது பற்றி கேட்டபோது பிரவீனுக்கும் அந்த மாணவிக்கும் இடையே தகறாறு ஏற்பட்டது. இதனால் மாணவி நேற்று மதியம் தன்னுடைய வீட்டில் இருந்தபோது பிரவீன் வீட்டிற்குள் நுழைந்து மாணவியை கத்தியால் குத்தினார். அந்த மாணவியின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் பிரவீன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் மாணவியை மீட்டு அருகில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது பிரவீன் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதாவது கடந்த இரண்டு வருடங்களாக பிரவீன் மற்றும் அஸ்விதா இருவரும் பக்கத்து வீட்டில் வசிப்பதால் காதலித்து வந்துள்ளனர். இளம் பெண் வீட்டிற்கு சிலிண்டர் எடுக்க சென்றபோது இருவரும் காதலை வெளிப்படுத்திய நிலையில் பெற்றோரும் இவர்களது திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரவீன் வேறொரு பகுதிக்கு குடும்பத்தோடு சென்ற நிலையில் அஸ்விதா ஆண் நண்பர் ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இது பற்றி பிரவீன் கேட்டபோது அவர் சரியான பதில் அளிக்கவில்லை. அதோடு கடந்த சில நாட்களாக பிரவீனிடம் அவர் சரியாக பேசவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் இதனால் தான் பிரவீன் ஆத்திரமடைந்து அஷ்விதாவை வீட்டிற்குள் நுழைந்து கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.