கேரள மாநிலம் காசர்கோட்டில், பள்ளிக் கால நண்பர்களுக்கிடையிலான பழைய சண்டை ஒன்று 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெடித்து, இன்று ஒரு தாக்குதல் வழக்காக மாறியுள்ளது. மலோம் நகரம் அருகே, 62 வயதான பாலகிருஷ்ணன் என்பவர், அவரது பள்ளி பருவ நண்பரான  வி.ஜே. பாபுவை தாக்கிய சம்பவம் திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் நடைபெற்றது.

பாலகிருஷ்ணனுடன் சேர்ந்த மேத்யூ வலியப்பலக்கல் என்பவரும் பாபுவை தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் பாபுவின் இரண்டு பற்கள் உடைந்ததாகவும், அவர் தற்போது கண்ணூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த சண்டையின் பின்னணி 1972ஆம் ஆண்டு நட்டக்கல்லு பள்ளியில் 4ஆம் வகுப்பில் நடந்த ஒரு வாக்குவாதமாகும். பாபு கூறுகையில், பள்ளிக்காலத்தில் ஒரு முறை பாலகிருஷ்ணனை அடித்ததாகவும், அது இன்றுவரை அவரது மனதில் பதிந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலோட்டமாக நண்பர்களாக நடந்து கொண்டிருந்தாலும், பாலகிருஷ்ணனின் உள்ளேயிருந்த பழைய பகை இப்போது வெளிச்சத்திற்கு வந்தது..

இந்த சம்பவம் குறித்து ஜெ.கே. முகுந்தன் என்ற காவல்துறை அதிகாரி கூறுகையில், பாலகிருஷ்ணன் மற்றும் மேத்யூ மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதாகவும், ஆனால் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பாபு, ரூ.1.5 லட்சம் இழப்பீடு அளிக்க தயாராக இருந்தால் வழக்கை வாபஸ் பெற தயார் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது காவல்துறையினர் மேலதிக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.