
மராட்டிய மாநிலத்தில் உள்ள நவிமும்பை பன்வெல் தேவிச்சா பாடா பகுதியில் பெற்றோருடன் இளம்பெண் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் யாரும் இல்லாததால் அதே பகுதியில் வசிக்கும் தனது 18 வயது காதலனை இளம்பெண் வீட்டிற்கு அழைத்துள்ளார். இந்நிலையில் இருவரும் வீட்டில் தனியாக இருந்தபோது இளம் பெண்ணின் அண்ணன் வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார். ஆனால் நீண்ட நேரத்திற்கு பிறகு இளம்பெண் கதவை திறந்த போது உள்ளே காதலன் இருப்பதைக் கண்டு அவரது அண்ணன் அதிர்ச்சியடைந்தார். அவர் கொடுத்த தகவலின் படி இளம்பெண்ணின் தந்தையும் வீட்டிற்கு வந்து விட்டார்.
பின்னர் இருவரும் சேர்ந்து இளம்பெண்ணின் காதலனை அரிவாள், மண்வெட்டி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இளம்பெண்ணின் அண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான அவரது தந்தையை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.