அசாம் மாநிலத்தில் ஜூலி டிகா என்ற 42 வயது பெண்மணி வசித்து வந்துள்ளார். இவருக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை விவாகரத்து செய்து பிரிந்தார். அதன் பிறகு லோகித் தகுரியா என்ற 45 வயது நபரை திருமணம் செய்து கொண்டு தன்னுடைய மகளுடன் அவருடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் ஜூலியின் 15 வயது மகளுக்கு அவருடைய இரண்டாவது கணவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததால் இது தொடர்பாக காவல் நிலையத்தில் ஜூலி புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து லோகித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக லோகித் ஜெயிலிலிருந்து வெளியே வந்தார். அதிலிருந்தே லோகித் மற்றும் ஜூலி இடையே தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வகையில் நேற்று முன்தினம் அதிகாலை மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த கணவன் தன் மனைவியை கட்டையால் தலையில் அடிக்க அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் அவருடைய 15 வயது மகளையும் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதைத் தொடர்ந்து லோகித் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.