நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில், வெறும் 29 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்களுடன் 97 ரன்கள் குவித்து அவர் அசுர வேட்டையாடினார். நடப்புத் தொடரில் இதுவரை 15 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யவன்ஷி, 45.33 சராசரியுடன் 680 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பிக்கான பந்தயத்தில் முதலிடத்தில் உள்ளார். இதில் ஒரு சதமும், 4 அரைசதங்களும் அடங்கும். இந்த சீசனில் அதிகபட்சமாக 65 சிக்ஸர்களை விளாசி, டி20 கிரிக்கெட்டின் அசுர வேக ஸ்பெஷலிஸ்ட்கள் நிறைந்த இந்த காலக்கட்டத்திலும் 242.85 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டுடன் அவர் தனித்து விளங்குகிறார்.

 

இளம் வீரரின் இந்த அபாரமான ஆட்டத்தைக் கண்டு வியந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முகமது யூசுப், வைபவ் சூர்யவன்ஷியை பாகிஸ்தானின் அதிரடி மன்னன் ஷாகித் அப்ரிடியுடன் ஒப்பிட்டுப் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) பதிவில், “15 வயதே ஆன கிரிக்கெட் சென்சேஷன் வைபவ் சூர்யவன்ஷி, இளம் வயது ஷாகித் அப்ரிடியை எனக்கு நினைவுபடுத்துகிறார். பயமற்ற, வெறித்தனமான அதிரடி மற்றும் துடிப்புமிக்க ஆற்றல் அவரிடம் உள்ளது; கிரிக்கெட்டின் எதிர்காலம் இதோ வந்துவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அப்ரிடியைப் போன்றே சர்வதேச பந்துவீச்சாளர்களின் பெயரைக் கண்டு அஞ்சாமல், முதல் பந்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தும் குணம் வைபவ்விடம் உள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதேவேளையில், அப்ரிடியின் ஆரம்பகால வாழ்க்கையில் இருந்த அதிரடியுடன் கூடிய அஸ்திரமற்ற ஆட்டத்தை தவிர்த்து, ஆட்டச் சூழலைப் புரிந்து கொண்டு முதிர்ச்சியுடன் விளையாடினால், வைபவ் சூர்யவன்ஷி உலக கிரிக்கெட்டில் ஒரு தனித்துவமான சாதனையைத் படைப்பார் என்றும் விளையாட்டு ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.