
2015 ஆம் ஆண்டு காணாமல் போன ஒரு சிறுவனை 10 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடித்து, அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் மீண்டும் இணைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2015 நவம்பர் 6 அன்று, நொய்டா ஃபேஸ்-2 பகுதியிலுள்ள கெஜா கிராமத்தில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன் திடீரென காணாமல் போனார். குடும்பத்தினர் இரண்டு நாட்கள் தேடியும் பலனில்லாமல், நவம்பர் 8 அன்று ஃபேஸ்-2 காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடக்கத்தில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், சிறுவனின் தகவல் எதுவும் கிடைக்காமல் போனது.
மே 28, 2025 அன்று ஹரியானாவின் சூரஜ்குண்ட் பகுதியில் ஏற்பட்ட ஒரு கடத்தல் சம்பவத்தில் மங்கள் குமார் என்ற நபர் கைது செய்யப்பட்ட போது, அவரது அருகில் இருந்த சிறுவன் குறித்து போலீசார் சந்தேகம் கொண்டனர்.
கடத்தப்பட்ட சிறுவனின் பெயர் மாற்றப்பட்டிருந்ததால், அவரை அடையாளம் காண்பது சிக்கலானதாக இருந்தது. ஆனால், நொய்டா போலீசார் ஒத்துழைப்புடன் 6 மணி நேரம் தொடர்ந்து பழைய புகார், பதிவுகள், அடையாள விவரங்களை ஆய்வு செய்து, சிறுவன் 2015 இல் காணாமல் போன அதே சிறுவன் என்பதை உறுதி செய்தனர்.
சிறுவன் நினைவில் வைத்திருந்த பெற்றோரின் பெயர்களின் அடிப்படையில், அவரது பெற்றோர் மைன்புரியில் வசிப்பது தெரியவந்தது. வலது கையில் இருந்த விரல் வெட்டு மற்றும் இடது கண் கீழ் இருந்த அடையாளம் மூலம் காணாமல் போன சிறுவன் தான் என்பதை உறுதி செய்தனர்.
சில தினங்களுக்குப் பிறகு, குழந்தையின் தாயும் தந்தையும் வந்து 10 வருடங்கள் கழித்து தங்கள் மகனைக் கட்டிப்பிடித்த அந்த தருணம் காவல்துறையினரையும் குடும்பத்தினரையும் கண்கலங்க வைத்தது.