மகாராஷ்டிர மாநிலம் நாலாசோபாராவில் உள்ள ஏடிஎம் (ATM) மையம் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் தனது கணக்கிலிருந்து 4,000 ரூபாய் பணம் எடுத்தபோது, மெஷினிலிருந்து வெறும் 3,600 ரூபாய் மட்டுமே வந்ததோடு, அதில் ஒரு 200 ரூபாய் நோட்டு முற்றிலும் கிழிந்த நிலையில் இருந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

நாலாசோபாராவின் காலா நகர் பகுதியில் உள்ள ஹிதாச்சி (Hitachi) நிறுவனத்தால் இயக்கப்படும் யூபிஐ (UPI) பணப்பரிவர்த்தனை ஏடிஎம் மையத்தில் இந்தத் தொழில்நுட்பக் கோளாறு அரங்கேறியுள்ளது. கார்டு இல்லாமல் யூபிஐ வசதி மூலம் 4,000 ரூபாய் எடுத்த அந்த வாடிக்கையாளர், மெஷினிலிருந்து வந்த பணத்தை எண்ணிப் பார்த்தபோது 400 ரூபாய் குறைவாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக வங்கி மற்றும் ஏடிஎம் சேவை நிறுவனத்திடம் ஆதாரப்பூர்வமாகப் புகார் அளிப்பதற்காக, அந்த ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி (CCTV) கேமரா முன்பாகவே நின்று, தனக்குக் கிடைத்த நோட்டுகளை மீண்டும் எண்ணித் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இதே வசாய்-விரார் பகுதியில் உள்ள ஹிதாச்சி ஏடிஎம் மெஷினில் 100 ரூபாய் எடுத்தால் 500 ரூபாயும், 400 ரூபாய் எடுத்தால் 2,000 ரூபாயும் என வாடிக்கையாளர்களுக்குக் கூடுதலாகப் பணம் வந்த விசித்திரத் தொழில்நுட்பக் கோளாறும் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அப்போது கூடுதலாகப் பணம் கொடுத்த மெஷின், தற்பொழுது வாடிக்கையாளர்களுக்குக் குறைவாகப் பணம் கொடுப்பதுடன் கிழிந்த நோட்டுகளையும் விநியோகிப்பதால், ஏடிஎம் பராமரிப்பு மற்றும் பணத்தை மறுபரிசீலனை செய்யும் முறை  குறித்துப் பொதுமக்கள் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ஏடிஎம் மெஷின்களின் இந்தத் தொடர் குளறுபடிகள் குறித்து வங்கி நிர்வாகம் உரிய விசாரணை நடத்தித் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்து வருவதால், இந்த ஏடிஎம் வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் அசுர வேகத்தில் ட்ரெண்டாகி வருகிறது.