இந்தியாவின் விருந்தோம்பல் பண்பிற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில், கர்நாடகாவில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவர் பெண் பிச்சைக்காரர் ஒருவரால் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பெண்மணி வெளிநாட்டவரைத் தொடர்ந்து பின்தொடர்ந்து 100 ரூபாய் தருமாறு விடாமல் கட்டாயப்படுத்துகிறார். அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கனிவாக மறுத்தபோதும், அந்தப் பெண் அவரை விடுவதாக இல்லை. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்தப் பெண், சுற்றுலாப் பயணியை அடித்துவிட்டு, அவரை “பைத்தியம்” என்று கேலி செய்தவாறு அங்கிருந்து நகர்கிறார்.

​இந்தச் சங்கடமான சூழலைக் கண்ட அங்கிருந்த இளைஞர் ஒருவர், உடனடியாக தலையிட்டு அந்தப் பெண்ணைக் கண்டித்தார். “வெளிநாட்டுப் பயணியிடம் இப்படித்தான் நடந்து கொள்வீர்களா?” என்று அவர் திட்டியதும் அந்தப் பெண் அங்கிருந்து சென்றார். உலக அரங்கில் இந்தியாவின் பிம்பத்தைப் பாதிக்கும் இதுபோன்ற செயல்கள் குறித்து நெட்டிசன்கள் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். நாட்டின் கௌரவத்தைச் சிதைக்கும் வகையில் சுற்றுலாப் பயணிகளிடம் அத்துமீறும் இது போன்ற நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.