சிறுமி என்றும் பாராமல் பாய்ந்து வந்த நாய்களிடமிருந்து தனது மகளைக் காப்பாற்ற முயன்ற தந்தையை, நாயின் உரிமையாளர்கள் கொடூரமாகத் தாக்கிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 மூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு நபர் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் (ஸ்கூட்டி) சென்று கொண்டிருக்கிறார். அப்போது, திடீரென இரண்டு வளர்ப்பு நாய்களும், இரண்டு தெரு நாய்களும் அவர்களை நோக்கி ஆக்ரோஷமாகத் துரத்துகின்றன. நாய்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டதால், பயந்துபோன அந்த நபர் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு, பின்னால் அமர்ந்திருக்கும் தனது சிறுமிக்கு ஏதும் நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகத் தற்காப்புக்காக நாய்களை விரட்ட முயல்கிறார்.

 

அப்போது அங்கு ஓடி வந்த வளர்ப்பு நாய்களின் உரிமையாளர்கள், தங்களது நாய்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, நாய்களை விரட்டியதற்காக அந்த நபர் மீது பாய்ந்துள்ளனர். தனது மகளின் முன்னிலையிலேயே அந்த நபரை அவர்கள் சரமாரியாகத் தாக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. இந்தச் சம்பவம் எங்கு, எப்போது நடந்தது என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். “தன் குழந்தையைக் காப்பாற்ற முயன்ற ஒரு தந்தை மீதா தாக்குதல் நடத்துவது?” எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். பொது இடங்களில் வளர்ப்பு நாய்களை உரிமையாளர்கள் முறையாகக் கட்டுப்படுத்தத் தவறுவதே இதுபோன்ற அசம்பாவிதங்களுக்குக் காரணம் எனப் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

நாய்களை அவிழ்த்துவிட்டுப் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவித்ததோடு, தந்தை மீது தாக்குதல் நடத்திய உரிமையாளர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் இன்னும் விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.