ஹைதராபாத் மற்றும் பிற பகுதிகளில் வேலை தேடும் இளம் பெண்களை குறிவைத்து மோசமான கோரிக்கைகளை வைக்கும் ரெக்ரூட்டர்களின் செயல் தற்போது இணையத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பின்னணிப் பாடகி சின்மயி ஸ்ரீபதா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சில வாட்ஸ்அப் உரையாடல்கள், வேலை வாய்ப்புத் துறையில் நடக்கும் முறைகேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. வேலை தேடிச் செல்லும் அப்பாவிப் பெண்களிடம் சில ஏஜென்சிகள் முறையற்ற கோரிக்கைகளை வைப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வைரல் பதிவில் இடம்பெற்றுள்ள சாட் ஸ்கிரீன்ஷாட்டின்படி, ஐ.டி மற்றும் இதர நிறுவனங்களில் பிரெஷர்களுக்கு வேலை கிடைக்க வேண்டுமென்றால், அவர்கள் நிறுவனத்தின் உயரதிகாரிகளை நேரில் சந்தித்துத் தனிப்பட்ட முறையில் உறவு கொள்ள வேண்டும் என்று கூச்சமின்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது. “சந்தை நிலவரம் அப்படித்தான் இருக்கிறது, இதற்குச் சம்மதித்தால் மட்டுமே வேலை மற்றும் உரிய ஆதரவு கிடைக்கும்” என்று அந்த நபர் சாதாரணமாகப் பேசியுள்ளது பலரையும் பதைபதைக்க வைத்துள்ளது. வெறும் 15,000 முதல் 20,000 ரூபாய் சம்பளத்திற்காக இதுபோன்ற கேவலமான நிபந்தனைகள் விதிக்கப்படுவது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதனை வன்மையாகக் கண்டித்துள்ள நெட்டிசன்கள் மற்றும் பிரபலங்கள், பெண்கள் இது போன்ற நபர்களைக் கண்டால் பயந்து ஓடாமல் உடனடியாக ஸ்கிரீன்ஷாட் ஆதாரங்களுடன் காவல்துறையில் புகாரளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர். வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்களைத் தவறான வழியில் பயன்படுத்த முயலும் இது போன்ற நபர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளங்களில் வலுத்து வருகிறது.