சட்டமன்றத்தில் நேற்று ராணிப்பேட்டை பகுதியில் உள்ள ஜே.கே. டயர் நிறுவனம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் ஜோசப் விஜய், அங்கு அந்த நிறுவனத்தின் தொழிற்சாலை எதுவும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். இருப்பினும், சட்டமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டிய சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினையைத் தீவிரமாக ஆராய்ந்து, சம்மந்தப்பட்ட மற்ற தொழிற்சாலையைக் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மேலும், தமிழ்நாட்டிற்குத் தொழில் வளர்ச்சியும் வேலைவாய்ப்புகளும் மிக அவசியமானது என்றாலும், சுற்றுச்சூழல் விதிகளை மீறி அந்த வளர்ச்சி இருக்கக்கூடாது என்பதில் அரசு எப்போதும் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

சமீபத்தில் நடைபெற்ற ‘வெற்றி தமிழ்நாடு’ முதலீட்டாளர் மாநாட்டில், ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட ஜே.கே. டயர் நிறுவனம், தமிழகத்தில் சுமார் 5,143 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய திட்டங்களைச் செயல்படுத்த முன்வந்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் தமிழகத்தில் 3,510 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், அனைத்துச் சட்டப்பூர்வமான சுற்றுச்சூழல் அனுமதிகளையும் முழுமையாகப் பின்பற்றியே தாங்கள் இயங்குவதாக அந்த நிறுவனம் தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் அதேவேளையில், மாநிலத்தின் இயற்கைச் சூழலையும் பாதுகாப்பதே தவெக அரசின் முக்கிய இலக்காகும் என்று முதலமைச்சர் விஜய் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். புதிய முதலீடுகளை ஈர்த்துத் தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், அனைத்துத் தொழிற்சாலைகளும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்குக் கட்டுப்படுவதை அரசு தொடர்ந்து உறுதி செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.

“>

 

பொறுப்பான மற்றும் நிலையான தொழில் வளர்ச்சியை நோக்கித் தமிழகம் தொடர்ந்து உறுதியுடன் நடைபோடும் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது.