தர்மபுரி மாவட்டம் ஹரிஹர நாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் மோனிகா. இவர் பிலிப்பைன்சில் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு கடந்த இரண்டு வருடங்களாக தர்மபுரி டவுனில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேர பணிக்கு சென்ற மோனிகா நள்ளிரவு தனி அறையில் தூங்கியுள்ளார்.

அதிகாலை 2 மணிக்கு புற நோயாளி பிரிவுக்கு நோயாளிகள் வந்ததால் செவிலியர்கள் அந்த அறைக்கு சென்ற கதவை தட்டினர். ஆனால் நீண்ட நேரமாகியும் மோனிகா கதவை திறக்கவில்லை. இதனையடுத்து ஜன்னல் வழியாக பார்த்த போது குளுக்கோஸ் போடும் ஊசியை கையில் செலுத்திய நிலையில் மோனிகா மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனே அங்கிருந்து அவர்கள் கதவை உடைத்து மோனிகாவை மீட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோனிகா உயிரிழந்தார். இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மோனிகாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு எடுத்தனர்.

அவர்கள் பார்த்த மாப்பிள்ளையை தனக்கு பிடிக்கவில்லை என மோனிகா தோழிகளிடம் கூறி வந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தவறான மருந்தை ஊசியில் செலுத்தி மோனிகா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது கைப்பையில் 40 தூக்க மாத்திரைகளும் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.