சைவ உணவை சாப்பிடுவவர்களை வெஜிடேரியன் என்று கூறுவது போன்று சைவ உணவிலும் பால், தயிர், வெண்ணை போன்றவற்றை தவிர்ப்பவர்களை வேகன் என்று கூறுவது வழக்கம். இப்படி வேகன் உணவை மட்டுமே உண்டு வாழ்ந்தவர் தான் ஜன்னா. இவர் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக வேகன் உணவு முறைதான் சிறந்தது என சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்து வந்தார். ஜன்னா இந்த வேகன் உணவுகளை சமைக்காமல் பச்சை காய்கறிகள் ஆகவும் பழங்களாகவும் சாப்பிட்டு வந்து பிறரையும் இதுபோன்றே சாப்பிட வலியுறுத்தினார்.

இந்த வேகன் உணவு முறையால் தனது உடல் மாறி வருவதாகவும் தற்போது என்னை எனக்கே பிடித்துள்ளதாகவும் இனி பழைய உணவு பழக்க வழக்கங்களுக்கு போகப் போவதில்லை எனவும் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருந்தார் ஜன்னா.  மேலும் கடந்த ஏழு வருடங்களாக ஜன்னா டூரியன் மற்றும் பலாப்பழம் மட்டுமே சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சுற்றுப்பயணமாக இலங்கைக்கு சென்ற அவர் சில மாதங்களுக்கு முன்பு மிகுந்த உடல் நல பாதிப்புடன் காணப்பட்டார். அவரை சிகிச்சை எடுக்க மருத்துவர்கள்  அறிவுறுத்திய போதும் அவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இந்நிலையில் அவர் திடீரென உயிரிழந்துள்ளார். அவரது தாயார் கூறுகையில் வேகன் உணவாகவே எடுத்து வந்ததால் ஏற்பட்ட அழுத்தத்தினால் காலரா நோயால் பாதிக்கப்பட்டவர் போன்று மாறி தனது மகள் இறந்து விட்டதாக கூறியுள்ளார். ஆனால் இவரது இறப்பிற்கான காரணங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் உணவு மற்றும் ஊட்டச்சத்துக்களுக்கான வல்லுநர்களின் ஆலோசனைப்படி நமக்குத் தேவையான உணவு வகைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர நாமாக குறிப்பிட்ட உணவை மட்டும் சாப்பிட்டு கொண்டிருந்தால் அது உடல் நலத்தை மோசமாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.