சென்னை பூந்தமல்லி அருகே நசரேத் பேட்டை பகுதியில் கலைவாணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுனராக வேலை பார்க்கும் நிலையில் திருமணம் ஆகி  13 வயதில் பிரியன் என்ற மகன் இருக்கிறார்கள். இதில் பிரியன் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த நிலையில் இவருடைய தந்தை நேற்று வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார்.

இந்நிலையில் பிரியன் வீட்டில் இருந்த தன்னுடைய தந்தையின் பைக்கை எடுத்துக்கொண்டு அதே பகுதியை சேர்ந்த இரண்டு சிறுவர்களுடன் சுற்றினார். இவர்கள் மூவரும் வண்டலூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் பைக் விபத்துக்குள்ளான நிலையில் சிறுவர்கள் மூவரும் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்தனர்.

உடனடியாக அந்த பகுதியில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து சிறுவர்கள் மூவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் ஏற்கனவே பிரியன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். மற்ற இருவருக்கும் சிகிச்சை வழங்கப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.