விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பூமாப்பட்டி கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெறிநாய் தொல்லை அதிகரித்து பெரும் பதற்றம் நிலவுகிறது. இந்த வெறிநாய் கடித்ததில் 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பயத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் விருதுநகர், மதுரை உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக மாடுகள், கன்றுகள் உள்ளிட்ட கால்நடைகளும் கடிக்கப்படுவதால், விவசாயிகள் மிகவும் ஆத்திரமடைந்துள்ளனர்.

வெறிநாயை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் தாமதிக்கிறது எனக் குற்றம்சாட்டிய பொதுமக்கள், பூமாப்பட்டி பேருந்து நிலையம் அருகே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது அந்த பகுதியில் பொதுமக்கள் கையில் கம்புகளைக் கொண்டு நாய்கள் மீது தாக்குதல் நடத்தும் எண்ணத்தில் சுற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வெறிநாய்களை சீராக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்