புதுச்சேரி மாநிலம் தவளைகுப்பம் அருகே ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 1-ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் இது தொடர்பாக பெற்றோர் புகார் கொடுத்தும் காவல்துறையினர் போக்சோ வழக்கு பதியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியை சூறையாடியதோடு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை சரமாரியாக அடித்து ஊர்வலமாக இழுத்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தால் புதுச்சேரி மற்றும் கடலூர் சாலையில் தவளை குப்பம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசையாக நின்றது. இந்நிலையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை நடுரோட்டில் வைத்து உறவினர்கள் அடித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் அந்த பகுதியில் பெரும் போராட்டம் வெடித்த நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளி தற்காலிகமாக மூடப்படும் என்றும் அந்த பள்ளியின் தாளாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதி கொடுத்தார்.