சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம்(79). இவரது பூர்வீக நிலம் சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலை மகுடஞ்சாவடி பகுதியில் உள்ளது. சுமார் நான்கரை சென்ட் நிலத்தை உறவினர்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு கண்ட பின்னர் கிரையம் செய்ய திட்டமிட்ட நிலையில் இந்த நிலத்தை வேறு ஒருவர் மகுடஞ்சாவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் கிரையம் செய்திருப்பதாக தர்மலிங்கத்திற்கு தகவல் வந்தது.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த தர்மலிங்கம் மகுடஞ்சாவடி பத்திர அலுவலகத்தை குடும்பத்துடன் முற்றுகையிட்டு மனு அளித்துள்ளார். இதனை முன்கூட்டியே அறிந்த சார் பதிவாளர் செல்வமணி விடுப்பு தெரிவித்து அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்.

இதுகுறித்து தர்மலிங்கம் கூறும் போது எங்களது பூர்வீக சொத்தை ஏமாற்றும் நோக்கில் சார்பதிவாளர் பணத்தை பெற்றுக் கொண்டு வேறு ஒருவருக்கு நிலத்தை கிரையம் செய்து கொடுத்துள்ளார்.இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நில அபகரிப்பு பிரிவு மகுடஞ்சாவடி காவல் நிலையம் உள்ளிட்டோரிடம் மனு கொடுத்திருப்பதாக தர்மலிங்கம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.