உத்தரப்பிரதேசம் ஜான்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற மகாராஜா சுஹேல்தேவ் விஜய் திவாஸ் விழாவில், தேசிய அரசியல் தலைவரான மகேந்திரா ராஜ்பரை அவரது முன்னாள் நண்பரும் கட்சி நிர்வாகியுமான பிரிஜேஷ் ராஜ்பர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழா நிகழ்ச்சியின் போது நடந்த இந்த தாக்குதல், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

விழா மேடையில் மகேந்திரா ராஜ்பருக்கு பிரிஜேஷ் முதலில் மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து, மகேந்திரா பேசுவதற்கான வாய்ப்பு வந்தபோது, பிரிஜேஷ் திடீரென மேடையில் அவரை தாக்க ஆரம்பித்தார். இந்த வீடியோவில், அவரை பலமுறை அறைந்ததும், பிறரால் தடுக்கப்படும் காட்சிகளும் தெளிவாக பதிவாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, மகேந்திரா ஜலால்பூர் காவல் நிலையத்தில் பிரிஜேஷ் ராஜ்பருக்கு எதிராக எழுத்துப்பூர்வ புகார் அளித்துள்ளார்.

தன்னை தாக்க வைத்தது, சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் மற்றும் யோகி ஆதித்யநாத் அரசு அமைச்சர்களில் ஒருவரின் உத்தரவே என மகேந்திரா குற்றம் சாட்டியுள்ளார். இது திட்டமிட்ட அரசியல் தாக்குதல் என அவர் உரைத்துள்ளார்.

 

மகேந்திரா மீது பிரிஜேஷ் ராஜ்பரும் குற்றம் சாட்டியுள்ளார். அதாவது  “சமாஜ்வாடி கட்சியிடமிருந்து நிதி பெற்றவர் மகேந்திரா. விழாவில் என்னை திட்டி அவமானப்படுத்தினார். அதற்காகவே பதிலடி கொடுத்தேன்” என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.