பெங்களூரில் இருந்து கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி சான்பிரான்சிஸ்கோ சென்ற ஏர் இந்தியா விமானத்தில் மதுரஸ் பால் என்ற பத்திரிக்கையாளர் பயணித்தார். அவர் தனக்கு விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பிளேடு கிடந்ததாக சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். அதாவது ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட அத்திப்பழ சாட் உணவில் பிளேடு கிடந்தது. இதனை கவனிக்காமல் வாயில் போட்டு மூன்று வினாடிகள் மென்று சாப்பிட்ட பிறகு தான் அது உணவில் கிடந்ததை அறிந்தேன். துப்பிய போது அது பிளேடு என தெரிய வந்ததாகவும் இதற்காக விமான பணிப்பெண் மன்னிப்பு கேட்டதுடன் கொண்டைக்கடலை வழங்கியதாகவும் கூறி இருந்தார்.

இந்த சம்பவத்தை ஏர்  இந்தியா நிறுவனம் ஒப்புக்கொண்ட நிலையில் விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பிளேடு கிடந்ததை தலைமை வாடிக்கையாளர் அனுபவ அதிகாரி உறுதி செய்தார். இது குறித்து அவர் கூறுகையில், உணவில் கிடந்த பொருள் எங்கள் சமையல் பார்ட்னர் காய்கறிகளை வெட்டுவதற்காக பயன்படுத்தும் இயந்திரத்தின் பாகம் என்பது தெரியவந்தது. இனி இதுபோன்ற நடப்பதை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்ற கேட்டரிங் பார்ட்னர் உடன் இணைந்து பணியாற்றி வருகின்றோம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.