கிரேட்டர் நொய்டா Knowledge Park-3 பகுதியில் உள்ள அன்னாபூர்ணா பெண்கள் விடுதியில் வியாழக்கிழமை மாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அதிலிருந்து தப்பிக்க பல மாணவிகள் தங்கள் விடுதி அறைகளிலிருந்து பால்கனி வழியாக குதித்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தீவிபத்து குறித்து மாலை 5.25 மணியளவில் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தின. 160 மாணவிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு தொடர்பான தகவல்கள் எதுவும் இல்லையெனவும் கூறப்பட்டுள்ளது.

வீடியோவில், மாணவிகள் பால்கனியில் நின்று உயிர் காக்க தவிக்கும் துயரமான காட்சிகள் பதிவாகியுள்ளது. மாணவிகள் சிலர் வெளியில் வெளியேறும் வழி இல்லாத நிலையில், ஏசி யூனிட்டுகளைப் பயன்படுத்தி கீழே இறங்க முயற்சித்துள்ளனர். புகைமூட்டம் மிகுந்ததால் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும், பலரும் “வெளியே வாருங்கள்” என்று கோஷமிடும் காட்சிகள் வீடியோவில் காணப்படுகிறது. இந்த சம்பவம் மாணவிகள் தங்கும் விடுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக இருப்பதையும் காட்டுகிறது.