சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அரசியல் நிலவரம் குறித்துப் பல அதிரடி கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்துப் பேசிய அவர், விஜய் தற்போது மிகப்பெரிய குழப்பத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தனித்து நின்று யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய தமிழிசை, “விஜய் தனித்து நின்று ஆட்சி அமைப்பேன் என்று சொல்வது வெறும் கனவுதான். கனவு காண்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு, அந்த வகையில் விஜய்யும் கனவு காண்கிறார்” எனத் தடாலடியாகத் தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது இலக்கு குறித்து தமிழிசை முன்வைத்துள்ள இந்த விமர்சனம், தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
