
சென்னை மாவட்டத்தை அடுத்த பனையூரில் ஜாக்டோ ஜியோ சங்கத்தில் இடம்பெற்றுள்ள உயர்நிலை- மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க குழுவினர் மற்றும் அதன் மாநில தலைவர் மாயவன் ஆகியோர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை சந்தித்து பேசி உள்ளனர்.
அந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் மாயவன் கூறியதாவது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை 8 முறை சந்தித்தோம். ஆனால் எங்களது வாக்குறுதிகளை தமிழ்நாடு அரசு நான்கரை ஆண்டுகளாக ஏற்கவில்லை. அரசை நம்பி ஏமாந்து விட்டோம். எனவே எங்கள் சங்கத்தின் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளோம்.
இதுகுறித்து விஜய் இடம் தெரிவித்த போது அவர் முழு ஆதரவு தெரிவித்துள்ளார் எனக் கூறினார். ஆனால் கடந்த 13ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை சந்தித்ததாக வெளியான செய்திக்கு ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் மாயவன் விஜயை சந்தித்ததற்கும், எங்களுக்கும் எந்தவித தொடர்பில்லை. நாங்கள் பழைய ஓய்வூதியம் குறித்த கோரிக்கைகளை தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம்.
சில சங்கங்கள் தனித்துவமாக செயல்படுகின்றன. அதனை தங்களோடு தொடர்புபடுத்தி கூற வேண்டாம் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயை தங்கள் அமைப்பினர் சந்திக்கவில்லை. பொய்யான தகவலை திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.