பிகார் மாநிலம் முஸாபர்பூர் பகுதியில் 9 வயது சிறுமி, மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறிய அண்டை வீட்டைச் சேர்ந்த ரோஹித் சாஹ்னி என்ற நபரால் பாலியல் வன்கொடுமை செய்து கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை கண்ட தாய், உடனடியாக மகளை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும், அங்கு அனுமதிக்க மறுத்துள்ளனர். மேலும் பாட்னா மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

அங்கிருந்து ஆம்புலன்ஸ் வர 2 மணி நேர தாமதம், மருத்துவமனைக்கு சென்றதும் படுக்கை வசதி உடனே இல்லாததால் 6 மணி நேரம் தாமதம் என நீண்ட நேரத்திற்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி அடுத்த நாளே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் மே 26ஆம் தேதி நடந்தது, அதற்கடுத்த நாளே சிறுமி இறந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் பிகார் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு மற்றும் சுகாதார வசதிகள் பற்றிய பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. குற்றவாளியான ரோஹித் சாஹ்னி கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிறுமிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைத்திருந்தால், உயிர் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.