மலையாளிகளின் பாரம்பரிய அறுவடைத் திருநாளான ஓணம் திருவிழா உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒற்றுமை, செழிப்பு, அறுவடை மற்றும் நல்லிணக்கத்தின் மையமாக கருதப்படும் இந்த பண்டிகையின் முக்கிய சிறப்பம்சமாக வாழை இலைகளில் பரிமாறப்படும் ‘ஓணம் சத்யா’ விருந்து இடம்பெறும்.
இந்நிலையில், ஓணம் திருநாளை முன்னிட்டு, தென்னிந்திய பாரம்பரிய உடையணிந்து, தனது செல்ல நாய் ‘சாய்’யுடன் ஓணம் சத்யாவை பகிர்ந்து கொண்ட ஒரு இளைஞரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ராகுல் ஜேபிரகாஷ் என்ற இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், ராகுலும், சாயும் வெள்ளை மற்றும் தங்க கலரின் பாரம்பரிய உடையில் தங்கள் வீட்டு தரையில் அருகருகே வாழை இலைகளில் அமர்ந்து விருந்தை ரசிக்கின்றனர். சாயுக்காக சிறிய வாழை இலை ஒன்றிலும், ராகுலுக்காக மற்றொரு இலையிலும் ஓணம் சத்யாவின் பல்வேறு வகையான உணவுகள் சமைக்கப்பட்டு பரிமாறப்பட்டுள்ளன.
வீடியோவில், சாய் தன் உரிமையாளர் அமர்வதற்காக சீராக காத்திருந்து, பிறகு இருவரும் சமமாக அமர்ந்து உணவை பகிர்ந்து கொள்வது பார்ப்பவரின் மனதை உருக்கும் வகையில் அமைந்துள்ளது. ராகுல், தனது கைகளால் சாய்க்கு அன்புடன் உணவளிக்கிறதும், அந்த நிகழ்வை ஒரு குடும்ப உறவாக மாற்றுகிறது.
View this post on Instagram
இந்த வீடியோவை காண்போர், “உணவின் ஊடாகவும், உறவின் உணர்வுகள் பரிமாறப்படலாம் என்பதற்கு இது ஓர் அழகிய எடுத்துக்காட்டு” என்று சமூக வலைதளங்களில் வரவேற்கின்றனர்.
ஓணம் என்பது உணவின் திருவிழா மட்டுமல்ல; மனிதனுக்கும், மிருகத்திற்கும் இடையே உள்ள அன்பையும் ஒற்றுமையையும் கொண்டாடும் நாள் என்பதை இந்த வீடியோ சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது.
