
கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டியில் ஒரு தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு ஹரிஷ் என்பவர் தனது நண்பர் விமலுடன் நேர்காணலுக்கு சென்றுள்ளார். அவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தனர்.
இந்த நிலையில் ஊட்டி- கோவை தேசிய நெடுஞ்சாலையில் பாய்ஸ் கம்பெனி பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சோலார் மின் கம்பத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் ஹரிஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர் ஹெல்மெட் போட்டிருந்தார். ஆனால் கழுத்துப்பட்டையை சரியாக அணியாததால் மோதிய வேகத்தில் ஹெல்மெட் பறந்து ஓடியது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த விமலை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த ஹரிஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.